Sunday, September 28, 2008

மதுவில் வீழ்ந்த காதல்!


உங்களுக்கு எத்தனையோ நெருக்கமான நண்பர்கள் இருக்கலாம், ஆனால் நீங்கள் அவர்களை முதல் சந்திப்பிலேயே முழுமையாக புரிந்து கொள்ள முடிவதில்லை. இப்படி எத்தனையோ நண்பர்களை, நான் முதல் சந்திப்பில் புரிந்து கொண்டதற்க்கும், இன்று அவர்களோடு நெருங்கிப் பழகுகையில் நான் புரிந்து கொண்டதத்குமான இடைவெளி மிகவும் நீளமானது.

இப்படியான ஒரு நட்புதான் எனக்கும் நண்பன் பொன்முடிக்குமான உறவு. பொன்முடியின் சொந்த ஊரின் பெயரைக் கேட்டால் '௨.பி' என்பான். நான் வெகு நாட்களாக 'உத்திரப்பிரதேசம்' என நினைத்திருந்தேன். பின்னொரு நாளில் தன் தெரிந்தது அவன் 'உளுந்தூர்பேட்டை' என்று.

பொன்முடியைப் போல நகைச்சுவை உணர்வு கொண்ட நபரைப் பார்ப்பது மிகவும் அரிது. அவனோடு படம் பார்க்க சென்றால், அருகில் இருப்பவர்கள் படம் பார்க்க முடியாது. இது எழுதப்படாத விதி. வார்த்தைக்கு வார்த்தை கமெண்ட் அடிப்பான்.

இப்படி எப்போதும் சிரித்தும், சிரிக்க வைத்துக் கொண்டும் இருக்கும் அவன், பிப்ரவரி மாதத்தின் முதல் நாளிலிருந்து மொவ்னம் கொள்ள ஆரம்பித்தான். அறையில் உள்ள நண்பர்களோடு பேசுவதைக் கூட முற்றிலும் தவிர்த்தான்.

பிப்ரவரி இரண்டாம் தேதி மாலை மருத்துவமனை சென்று ரத்த தானம் செய்து விட்டு இரவு தாமதமாக வந்தான். யார் யாரோ ஏதேதோ கேட்டுப் பார்த்தும் கூட எதுவும் பேச மறுத்தான்.

சூரியன் இறங்கி முகத்தில் விளையாடும் வரை தூங்கும் அவன், பிப்ரவரி மூன்றாம் தேதி சூரியனுக்கு முன்னமே எழுந்து கோவிலுக்குச் சென்றான். திரும்பி வரும் போது மது பாட்டிலோடு வந்து குடிக்க ஆரம்பித்தான். குடிப்பதற்க்கு காரணம் தேவைப் படாத நண்பர்களும் அவனோடு சேர்ந்து கொண்டார்கள். மதியம் தாண்டியும் யாவரும் மதுவோடு விளையாடிக் கொண்டிருந்தனர்.

அந்த மயக்கம் பொன்முடிக்கு சற்று ஆறுதல் தந்திருக்க வேண்டும். மெதுவாக பேச ஆரம்பித்தான். "பள்ளி நாட்களில் கண்மணி என்றொரு பெண்ணை காதலித்ததாகவும், அவள் ஒரு போதும் தன்னையும், தன் காதலையும் ஏற்க்கவில்லை" என்று நேற்று நடந்ததைப் போல எல்லாவற்றையும் எங்களோடு பகிர்ந்து கொண்டிருக்கும் போதே ஒரு குழந்தையைப் போல தேம்பி அழ ஆரம்பித்தான்.

மது அருந்திய உதடுகள் என்ன பேசுவது என்று தெரியாமல் வெறுமையை பருகத் தொடங்கின. காரணமற்ற மவ்னம் யாவரையும் நிலை குலைய வைத்திருந்தது. சூரியன் வடக்கே ஓடி ஒளிந்து கொண்ட மாலை நேரத்தில் மது புட்டிகளும், பிரியாணி பொட்டலங்களுமாக அறை முழுவதும் சிதறிக் கிடந்தது. அறையின் அந்த கோலமே மனதில் வலியை உருவாக்கியிருந்தது. பொன்முடி நிலை குலைந்து போய் உறங்கிக் கொண்டிருந்தான். கண்களில் கண்ணீர் வழிந்து உறைந்து போயிருந்தது. பின்னாளில் அவன் தன்னிலைக்கு வருவதற்க்கும், உதட்டில் புன்னகை குடிகொள்வதற்க்கும் ஒரு வார காலமாகியது.

பொன்முடியின் காதலை ஏற்பதும், ஏற்காமல் போவதும் அவளின் தனிப்பட்ட விருப்பம். ஆனால், "யாருக்காக இப்படி ஒருவன் மதுவில் வீழ்ந்து கிடக்கிறான்? இரவில் தலையணையோடு காதலில் தலை சாய்த்தபடியே உறங்கிப் போய்கிறான். அவள் நினைவிலேயே, அவன் நாட்கள் மூர்க்கம் கொண்டு நகர்கிறது" என்பதையோ அவள் அறிந்திருக்கவில்லை என்பதில் தான் அவனுடைய துயரம் தாளாமல் நீண்டு கொண்டிருக்கிறது.

பின்குறிப்பு:
வரும் பிப்ரவரி 3ம் தேதி நீங்கள் பொன்முடியை சந்திக்க நேர்ந்தால், உங்களுக்கு நிச்சயமாக நெப்போலியன் ஹாப்போ, குவாட்ரோ கிடைக்கும். ஆனால், அதில் போதை ஏறாது. வெறுமையும், துயரமும் உக்கிரத்தாண்டவமாடும். அருந்திப் பாருங்கள்!

Thursday, September 25, 2008

J.K.ரித்தீஸ் குமார்-காலத்தின் கட்டாயம்

இருபது நாட்களுக்கு முன்னால் ஒரு அதிகாலையில், என்னுடைய நண்பன் விஜேந்திரன் சிங்கப்பூரிலிருந்து என்னை கைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினான். இங்கே சென்னையில் இருந்த நாட்களில் காலை பத்து மணி வரை தலையணையை கட்டிக்கொண்டு தூங்கும் அவன், அதி காலையில் எனக்குபோன் செய்தது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. போனை எடுத்து பேசிய போது விஜேந்திரனின் குரல் மிகவும் பதட்டமாக இருந்தது.காரணம் கேட்டபோது, அவன்கூறிய செய்திகள் எனக்கு சிரிப்பை வரவழைத்தது.

"
முந்தய நாள் இரவு J.K.ரித்தீஸ் குமார் நடித்த நாயகன் படம் பார்த்ததாகவும், அப்போதிலிருந்து இன்னும் தூக்கம் வரவில்லை. நீ அந்தபடத்தைப் பற்றி ப்ளோகில் எழுத வேண்டும்" என்றும் கேட்டுக்கொண்டான். நாயகன் ட்ரைலரை பார்த்த எனக்குபடம் பார்க்கும் தைரியம் வரவில்லை. ஆனாலும்விஜேந்திரன் எனக்கு தொடர்ந்து போன் செய்து எழுதுமாறு கேட்டுக்கொண்டான்.


"ஒரு புள்ளப்பூச்சியை நம் கையால் கொள்ள வேண்டுமா?" என நினைத்ததைத் தவிர எழுதாததட்க்கு வேறு எந்தகாரணமும் இல்லை.

நடிகர் விஜயின் முதல் பட விமர்சனத்தில் "இப்படி ஒரு நடிகர் தமிழ் சினிமாவுக்குதேவையா?" எனக் கேட்ட ஆனந்த விகடன், சச்சின் திரைப் படத்திற்க்கு எழுதியவிமர்சனத்தில் "விஜயின் கன்னங்கள் ஆப்பிள் போல இருக்கிறது" என்றுஎழுதியது.(எழுதியவரின் மன நிலையை பற்றி நீங்கள் சாவகாசமாக சிந்தித்துப்பாருங்கள்)

ஆகவே வீரத்தளபதி கவலைப் படத் தேவையில்லை. அடுத்த பட விமர்சனத்தில் விகடன் நண்பர்கள் 100க்கு 35 மதிப்பெண்கள் வழங்கி உங்கள் கன்னங்களை பலாப்பழம் என்றோ அன்னாசி பழம் என்றோ வருணிப்பார்கள்.

இரண்டு நாட்களுக்கு முன்னால் ப்ரொடக்சன் மேனஜர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்த போது நான் "வீரத்தளபதி கிட்ட எதாவது இங்கிலீஷ் படக் கதையைசொல்லி படம் பண்ணப்போறேன்" என்று சொன்னேன். அதற்க்கு அவர் அதெல்லாம் சிரமப்பட வேண்டாம். ஏதாவது தமிழ் படக் கதையவே சொல்லி படம் பண்ணிரு!' என்றார்.

ஆகவே நண்பர்களே, இந்த பத்தியை கண்டு கொள்ளாதிர்கள். முடிந்தால் மறந்துவிடுங்கள். விரைவில் வீரத்தளபதியை வைத்து ஒரு படம்(பாடம்) எடுக்கப்போகிறேன். அதற்க்கு உங்களின் மேலான ஆதரவையும் வேண்டுகிறேன்.


Wednesday, September 17, 2008

டென்சிங் - பொன் முட்டையிடும் வாத்து!

இந்த பதிவு 'வாழ்க்கை கருணையற்றது' என்ற பெயரில் நவம்பர் மாதம் பதிவில் புதுபிக்கப்பட்டுள்ளது.

Saturday, September 13, 2008

மானாட மயிலாட-உலகிற்க்கு உணர்த்தும் உண்மைகள்



நிகழ்வு -1

மானாட மயிலாட நிகழ்ச்சியில் பங்கேற்க்கும் கணேஷ்-ஆர்த்தி ஜோடி ஒரு இமாலய சாதனையை நிகழ்த்தி இருகிறார்கள்.
நடிகர் கணேஷ் தனது தந்தையின் மரணத்திற்க்கு பிறகான இறுதிச் சடங்கிற்க்கு கூட செல்லாமல் மானாட மயிலாட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெற்றிகரமாக நடனத்தையும் அரங்கேற்றிவிட்டு, பின்பு நாட்டிய சிகாமணி மாஸ்டர் கலாவிடம் சொல்லி அழுதிருக்கிறார். நாட்டிய சிகாமணியும் அழுதபடியே ஆறுதல் கூறியிருக்கிறார்.அடுத்ததாக நடிகை ஆர்த்தி.ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவதட்க்காக தலையை மொட்டை அடித்திருக்கிறார். அனுதாப அலையில் முழுகிப்போன குஸ்பூ,கலா,ரம்பா (நாட்டிய சிகாமணிகள்) ஆகிய மூன்றுபேரும் ஒன்பது மதிப்பெண்கள் வழங்கி கவுரவித்தனர்.

நிகழ்வு - 2

நான்கு நாட்களுக்கு முன்பாக காலை பதினோரு மணியளவில் மின்சார ரயிலில் சென்று கொண்டிருந்தேன். கூட்டம் சற்று குறைவாகவே இருந்தது. அப்போது பதினைந்து, பதினாறு வயது மதிக்கத்தக்க ஒரு பள்ளி மாணவனும்,ஒரு பள்ளி மாணவியும் மாரோடு மாறாக உரசியபடி உதட்டோடு உதடாக முத்தங்களை பரிமாறிக்கொண்டிருந்தனர்.
எங்கள் பெட்டியிலிருந்த ஆண்கள்,பெண்கள் பலரும் அதிர்ச்சியில் உறைந்தனர். முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் எழுந்து வந்து அந்த மாணவனை காதோடு காதாக நான்கு அறை விட்டார். அந்த மாணவனும்,மாணவியும் அடுத்த ரயில் நிலையத்தில் இறங்கி விட்ட பின்பும் கூட யாவரும் அதிர்ச்சி விலகாமல் இருந்தனர்.

இரண்டு நிகழ்வுகளும் விளக்கும் உண்மைகள்:

1) நீங்கள் நிகழ்வு-1ஐ ஏற்றுக்கொண்ட்டீர்கலானால், நிகழ்வு-2ஐயும் ஏற்றுக்கொள்ளுங்கள்.

2) தொடர்ந்து இது போன்ற நிகழ்ச்சிகளை குடும்பத்தோடு ரசித்து மகிழும் பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகள், நீங்கள் இறந்த பின்பு உங்கள் இறுதிச் சடங்கை கூட அப்படியே போட்டு விட்டு, தொடர்ந்து நிகழ்ச்சிகளை பார்பார்கள். உங்கள் ஆத்மா அவர்களுக்கு நிச்சயம் ஆசி வழங்கவேண்டும் .

3) மேலும் இது போன்ற வாழ்க்கை தரத்தை உயர்த்த உதவும் நிகழ்ச்சிகளை கண்டு கழிக்கும் உங்கள் குழந்தைகளுக்கு, பிறிதொரு நாளில் மாரோடு மாராக அணைத்து முத்தங்கள் பரிமாற்ற நீங்கள் அனுமதி வழங்க வேண்டும் அல்லது கண்டு கொள்ளாமல் இருந்து விட வேண்டும்.

பின்குறிப்பு:
நான் ஒன்றும் கலைஞருக்கோ, கலைஞர் டி.விக்கோ எதிரானவன் அல்ல. என்னுடைய தாத்தா திராவிட இயக்கங்களால் ஈர்க்கப்பட்டு முப்பது ஆண்டுகளாக திராவிட கழகத்தின்பால் பற்றோடு இருந்து, இறந்தவர். எனுடைய கோபம் சாமானியனுக்கான கோபம்.
இறுதியாக..... முத்தம்மிடுக்கொண்ட மாணவனை அடித்த அந்த நபரும், இந்த பத்தியை எழுதும் நானும் எதோ "கட்டியணைத்து முத்தமிட இயலாதவர்கள்" என நினைப்பவர்களும், இந்த பத்தியின் மீது மாற்றுக் கருத்து கொண்டவர்களும், மானாட மயிலாட ரசிகர் மன்றங்களை சேர்ந்தவர்களும், கமென்ட் எழுதுவதை விட்டு விட்டு வேறு ஒரு உருப்படியான வேலையைப் பாருங்கள்.

Tuesday, September 9, 2008

எழுத்தாளனின் மனைவி - குறும்படம்2006


கதைச்
சுருக்கம்-
எதிர் வீட்டு நபர் கூட யார் என தெரியாத இன்றைய சூழலில் வாழும் இரு வேறு மனங்களைப் பற்றிய கதை.அடங்காமல் பீறிட்டெழும் தனிமை,அது இட்டுச்செல்லும் உணர்வுநிலைகளின் பதிவு...

இந்த குறும்படத்தில் எழுத்தாளராக நடித்த திரு.செண்பகநாதன்(உபாலி) அவர்கள் ஒரு எழுத்தாளர். அவர் எழுதிய புத்தகங்கள்; சுரோனித வானம்(கவிதை), அமரத்தவம்(போர்கே,மார்க்வெஸ்,கால்வினோ மொழி பெயர்ப்பு சிறுகதை), ஆலிஸின் அற்புத உலகம் (மொழி பெயர்ப்புப் புதினம்) ஆகியனவாகும். மேலும் தீராநதி ,நிழல் ஆகிய இதழ்களில் கட்டுரைகளும் எழுதி வருவதுடன் , தற்போது நாவல் ஒன்றையும் எழுதி வருகிறார்.

இந்த இனிய தருணத்தில் இக் குறும்படம் உருவாக காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இக் குறும்படத்தில் எங்களுடன் பணிபுரிந்த பாலாஜி கார்த்திக், சில மாதங்களுக்கு முன்னால் மஞ்சள் காமாலையால் பீடிக்கப்பட்டு இறந்து விட்டான். அவனுக்கு இந்த குறும்படத்தை சமர்ப்பணம் செய்கிறேன்.


http://in.youtube.com/watch?v=zUhy0inJd0w

உங்களுடைய கருத்தை பதியலாம்

Tuesday, September 2, 2008

மானாட மயிலாட - கலைஞரின் தத்துவப் பார்வை



ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் தொடங்கி, முக்கடல் சங்கமிக்கும் கன்னியாக்குமரியில் வானுயர வள்ளுவர் சிலை, சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டம், மற்றும் செம்மொழி தகுதியை தமிழ் அடைந்தது வரை, கலைஞரின் தமிழ் பணியை யாரும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

ஆனாலும், நமது தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கு மிகப் பெரிய மனக் குறை ஒன்று இருந்து வந்தது. அது திருக்குறளை ஒட்டி அமைந்த மனக்குறை.

திருக்குறளில் திருவள்ளுவர் "தமிழ்" என்ற வார்த்தையை மட்டும் பயன்படுத்தவில்லை என தமிழாசிரியர்கள் சொல்லக் கேட்டிருப்போம். இந்த இடத்தில் தன் கலைஞர் நம்முடன் வித்யாசப்படுகிறார். அவர் பல நாட்களாக தலை கீழாக நின்று சிந்தித்ததன் விழைவு (இது ராமன் விழைவைக் காட்டிலும் அற்புதமானது) "மச்சான் விழைவு". இந்த மச்சான் என்ற வார்த்தையையும் வள்ளுவர் பயன்படுத்த வில்லை என்பதை அறிந்த கலைஞர், அதை உலகுக்கு அறிவிக்க ஆசைப்பட்டார். இதன் பயனே கலைஞர் டி.வி. இந்தியாவிலேயே பெயரை பதிவு செய்த அறுபத்து ஐந்து நாட்க்களுக்கு உள்ளாகவே டி.வி சேனலை தொடங்கிய குழுமம் கலைஞர் டி.வி. (அதிகார வர்க்கத்தின் வலிமை நிருபிக்கப்பட்ட இடம் அது)

கலைஞர் டி.வியின் ஆரம்ப நாட்களில் நல்ல தமிழில் நமீதா "மச்சான்" என்று அழைக்கும் போதெல்லாம் பார்வையாளர்கள்
சிலாகித்தார்கள். கலைஞர் கனவும் இனிதே நிறைவேறியது.

நமீதா பேசும் தமிழைக் கூட சகித்து கொள்ளலாம். அனால் நடன நிகழ்ச்சிகளில் "கெமிஸ்ட்ரி வொர்க் அவுட்" செய்கிறார்கள். எவன் பொண்டாட்டியோட எவன் கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் பண்றது? _ _ _ _ _ _!
சன் மியூசிக், இசையருவி தொகுப்பாளிகள் சாப்டிங்களா? என்ன சாப்பாடு? யார லவ் பண்றீங்க? என்று பல்லை இளித்துக்கொண்டு கேட்கிறார்கள். இவர்கள் கேட்ட பிறகு தான் தமிழன் சோறு சமைப்பான், சாப்பிடுவான், காதல் செய்வான். இல்லையா?

சுதந்திர தினத்திற்கும் நமீதா, நயன்தாராவிட்கும் என்ன சார் சம்பந்தம்? நாம் ஏன் இப்படி அறிவீலிகளாக மாறிப்போனோம்?

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற அபினவ் பிந்த்ரா, சுசில் குமார், விஜேந்தர் குமார் ஆகியோரைப் பற்றி அரை மணி நேரம் நிகழ்ச்சி வழங்க லாயக்கற்றவர்களாக டி.விக்கள் மாறிப்போனது யாருடைய சாபக்கேடு?

காமன் வெல்த் போட்டியில் பதக்கம் வென்று வந்த சாந்தி, பால்(ஆனா?பெண்ணா) சர்ச்சையில் சிக்கிய போது பிரச்சனையை ஊதி கிளப்பியதேயன்றி, எந்த ஊடகமும் குரல் கொடுக்க வில்லையே?

ஆகஸ்ட் 31ம் தேதி கோவையில் நடந்த மாரத்தான் போட்டியில், புதுக்கோட்டை அரசுப்பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் விஜயலட்சுமி(15) இரண்டாவது இடத்தையும், கவிதா(16) நான்காவது இடத்தையும் பிடித்தனர். இந்த இருவரும் ஷூ அணியாமலேயே ரத்தம் கசிய ஓடி வந்து பரிசுகள் பெற்றனர். இதையெல்லாம் பற்றி பேச மீடியாவிற்க்கு நேரம் இல்லை. ஆனாலும் கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட் பண்ணுவதிலும், காதலை சேர்த்து வைப்பதிலும் பெரும் சேவை புரிந்து வருகின்றன.

இந்த வேலைக்கெல்லாம் எங்கள் ஊரில் வேறு பெயர் சொல்லி அழைப்பார்கள்! அந்த பெயர் உங்களுக்கும் தெரியும் என்று நினைக்கிறேன்!

இந்த பத்தியைப் பற்றி உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்...