Saturday, January 4, 2014

ஒரு மட்டன் பிரியாணியும், பிஷ் தவாவும்!


இன்று காலை தமிழ் ஹிந்து பத்திரிக்கையில் எஸ்.ராமகிருஷ்ணனின் "நிமித்தம்" நாவலின் ஒரு அத்தியாயம் வெளியிடப்பட்டிருந்தது. அத்தியாயம் முழுவதும் புலம்பல்களும், அநாவசிய விவரிப்புகளும், சுய கழிவிரக்கத்தை கோருவதுமாக ஆனந்த விகடனில் வரும் நட்சத்திர எழுத்தாளர்களின் அம்சாத்துடன் அது இருந்தது.

அந்த அத்தியாயத்தின் சிறு பகுதி:

1) "யானை தன்னை அறிந்து கொள்ளவே இல்லை. யாரோ கொடுக்கிற வாழைப்பழத்திட்காக அது தனது தும்பிக்கையை தூக்கி ஆசீர்வாதம் செய்கிறது. பாகன் தரும் சோற்றுக் கவளங்களுக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறது. யானை வாழ்வதட்கான இடம் கோவில் இல்லை. ஆனால், யானை பழகிவிட்டிருக்கிறது."

2) "ஜெயித்தவர்கள் உலகோடு பேரம் பேசத் துவங்கிவிடுகின்றனர்.

மேட்கண்ட வார்த்தைகள்  எஸ்.ராமகிருஷ்ணனின் வியாபார  மனநிலையையே பிரதிபலிக்கின்றன. அவரும் தான் ஒரு காட்டு யானையின் பலம் கொண்டவர் என்பதை மறந்து, வாழைப் பழத்திட்காக (ராயால்டி) கும்பிடு போடுபவராகவும். இலக்கியத் தரத்தை பேரம் பேசுபவரகவும் மாறிவிட்டார்.

நாவலின் அத்தியாயம் முழுவதும் உள்ளுணர்வு சார்ந்து எதுவுமே இல்லாமல், மூன்றாம் தர தமிழ் சினிமா இயக்குராரை போல காட்சிகளாக அடுக்கிக் கொண்டே போகிறார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு கவின்கயல் பதிப்பகம் வெளியிட்டுள்ள எஸ்.ராமகிருஷ்ணனின் இரண்டு நாடகங்களின் தொகுப்பை (முதல் தொகுப்பின் பெயர் நினைவில் இல்லை மற்றொன்று 'கலீலியோ') வாங்கி வந்து படிக்கத் தொடங்கினேன். முதல் வார்த்தை "டோய்க் டோய்க் என சப்தம் வர" என்று ஆரம்பித்து கிழவி மாதிரி கதையை நீடித்துக்கொண்டே இருந்தார். வாங்கிய 20 நிமிடத்தில் டிஸ்க்கவரி புத்தக நிலையத்திலேயே திரும்பிக் கொடுத்தேன். அதை அந்த கடைக்கார அண்ணன் மாற்றித் தர வழியில்லை என்றதால், அந்த புத்தகத்தை அவர்களிடமே திரும்பிக் கொடுத்துவிட்டு "தயவு செய்து இதை யாராவது புத்தகம் வாங்க முடியாத நண்பர்களுக்கு அன்பளிபாக கொடுத்துவிடுங்கள். முடிந்தால் எஸ்.ராவிடம் 'உங்கள் புத்தகத்தை படிக்க முடியாமல் ஒருவன் யாருக்காவது இணாமாக கொடுத்து விடச் சொன்னான்’ என சொல்லுங்கள்" என்று சொல்லிவிட்டு வந்தேன். கடைக்கார அண்ணன் செய்வதறியாது நின்றார்.
"எஸ்.ராமகிருஷ்ணனின் உறுபசி நாவலில் உளவியல் ஆய்வு" என்ற தலைப்பில் m.phil ஆய்வை முடித்து விட்டு கட்டுரையை சமர்பிக்கும் போது பேராசிரியர் கேட்டார். " எஸ்.ராவிடம் நீங்கள் நேர்காணல் செய்யவில்லையா?" என்றார். என்னுடைய பதில் "நாவல் எழுதிய போது இருந்த எஸ்.ராமகிருஷ்ணன் இப்போது இல்லை".
-அர்த்தம் புரிந்தவராய் கல்ல சிரி சிரித்தார்.

எதையோ சொல்ல நினைத்து எங்கோ வந்து விட்டேன். ஹிந்துக்கு நன்றி. "நிமித்தம்" நாவல் வாங்கும் காசுக்கு தலப்பாக்கட்டியில் ஒரு மட்டன் பிரியாணியும், பிஷ் தவாவும் சாப்பிடும் ஐடியா உள்ளது.
(எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்துக்களை படிக்க விரும்புவோர், அவருடைய 2010க்கு முந்தைய படைப்புகளை மட்டும் படித்து மகிழலாம். பிந்தயத்தற்கு நான் பொறுப்பல்ல.)