Monday, August 6, 2012

The God of Small Things!

"The God of Small Things" என்ற அருந்ததிராயின் நாவலை தமிழில் மொழிபெயர்க்க உயிர்மை பதிப்பகம் முயற்சிகள் மேற்கொண்டும் பலனளிக்காத சூழலில், "சின்ன விசயங்களின் கடவுள்" என்ற பெயரில் "The God of Small Things " நாவல் ஜி.குப்புசாமியின் மொழிபெயர்ப்பில் காலச்சுவடு பதிப்பகத்தால் கடந்த மாதம் 28 ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த மொழிபெயர்ப்பு தொடர்பாக உயிர்மைக்கும், அருந்ததிராய்க்கும் இடையே நடந்த திரைமறைவு விசயங்களை மனுஷ்யபுத்திரன் பலமுறை உயிர்மை இதழிலும், இணையத்திலும் புலம்பித் தீர்த்தார். இந்த நிலையில் நாவலின் வெளியீட்டு விழா மேடையிலேயே கவிஞர் சுகுமாரன், மனுஷ்யபுத்திரனுக்கு வேண்டிய புதிரின் விடையை சொல்லியும் சென்றார். இருந்தும் தன் காழ்புணர்ச்சி குறையாத மனுஷ்யபுத்திரன், வாஸந்தி மாதிரியான அரைகுறை பெண்ணியவாதிகளை வைத்து 1960 -இல் வெளியான 'To Kill a Mocking Bird" நாவலை தழுவி அருந்ததிராயின் நாவல் உள்ளது என்றும், அவருக்கு வழங்கப்பட்ட புக்கர் பரிசு "அருந்ததிராயின் கருத்த சுருண்ட முடியையும் அகன்ற ப்ரௌன் கண்களையும் ப்ரௌன் சருமத்தையும் கண்ட மயக்கத்தில் வழங்கப்பட்டது" என அருவருப்பான ஒரு விமர்சனத்தை முன்வைத்திருக்கின்றனர்.
மேலும் மாவோஇஸ்டுகளுக்கு ஆதரவாக அறிக்கைகள் கொடுப்பதால் "அவர் வாயை மூடிக்கொண்டும் அடுத்த நாவலைப் பற்றி யோசிக்கட்டும் " என்ற வாதத்தையும் முன்வைக்கின்றனர். அவரை வாயை மூடிக்கொண்டிருக்க சொல்ல, கேவலமான இலக்கிய அரசியலை எப்போதும் கையிலெடுக்கும் உயிர்மைக்கு எந்த அருகதையும் இல்லையோ அதைப் போலவே அவரை அடுத்த நாவலைப் பற்றி யோசிக்கவும் சொல்லவும். "The God of Small Things" போன்ற நாவலுக்கெல்லாம் ஏன் இத்தனை சிரத்தை எடுத்தாய்" என்று சொன்ன அமரர்.சுஜாதா போன்ற அரைகுறை இலக்கியவாதிகளுக்கு கொடி பிடித்து அலையும் மனுஷ்யபுத்திரன் தொடர்ந்து "ஸ்டீரியோ டைப்" கவிதைகளை தினக் கழிவு போல கொட்டித் தீர்த்துக் கொண்டும் உள்ளார். இன்றைய தினத்தில் தமிழ்நாட்டில் நடக்கும் எத்தனையோ சோதனைகளை தங்கிக் கொள்ளும் நாங்கள், உங்களின் கவிதைகளை!!??? படித்துவிட்டு "வாயை மூடிக் கொள்ளுங்கள். பேனாவை கவுத்து வையுங்கள்" என்றெல்லாம் சொல்லாமல் இருப்பது போலவே நீங்களும் இருந்து விடுங்கள். அப்படியே பேச வேண்டும் என்றால் நேர்மையாக பேசக் கற்றுக்கொள்ளுங்கள். மேலும் தழுவலைப் பற்றி பேச உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது. நந்தலாலா (KIKIJIRO) வெளியான போது அதனை கலைஞர் டிவியில் கொஞ்சம்கூட கூச்சம் இல்லாமல் புகழ்ந்தவர் தானே நீங்கள்...? Kikijiro வின் தழுவல்தான் நந்தலாலா என உங்களுக்கு தெரியாது என்றால், சினிமா பற்றிய போதிய அறிவு இல்லாத நீங்கள் அந்த டிவி நிகழ்ச்சிக்கு சென்றதை "மனுஷ்யபுத்திரன் வாய்ப்புக்காகவும் புகழுக்காகவும் அலைபவர்" என்று நாங்கள் கருதிக் கொள்ளலாமா? "The God of Small Things" நாவலில் வரும் "ராஹேல்" கதாபாத்திரம் உங்களுக்கு அருந்ததிராயை ஞாபகப்படுத்தவில்லையா? சுயசரிதையின் சாரம் நாவலில் ஓடுவது உங்களுக்கு தெரியவில்லையா? இதற்கு மேலும் தழுவலைப் பற்றியும் அதன் வரலாறையும் விளக்கிச் சொல்ல வேண்டுமானால் அந்த வரலாற்றின் தொடக்கப் புள்ளியை உயிர்மையிலிருந்தும் அதன் ஆஸ்தான நாயகன் எஸ்.ராமகிருஷ்ணனில் இருந்துமே தொடங்குங்கள்!! இந்த மாதிரியான விசயங்களுக்கெல்லாம் நேரம் ஒதுக்குவது என்பது கஷ்டமானதாக இருந்தாலும், இரத்தம் குடிக்கும் கொசுக்களை கொள்ளாமல் ஆழ்ந்த தூக்கம் கைகூடுவதில்லை!