Sunday, November 30, 2008

தரமான படம் பார்க்க விரும்புகிறவர்கள் மட்டும் வரட்டும்!

'தங்கராசு மாமா, தங்கராசு மாமா' என்று ஒவ்வொரு நொடியும் உருகும் 'மாரியாயி' என்ற தூய ஆத்மாவின் கதை தான் 'பூ'.

எழுத்தாளர் ச.தமிழ்செல்வனின் 'வெயிலோடு போயி' என்ற சிறுகதை, இயக்குனர் சசியால் 'பூ'வாக மலர்ந்திருக்கிறது. திலகவதி i.p.s அவர்களால் ச.தமிழ்செல்வனின் சிறந்த பத்து கதைகள் 'முத்துக்கள் பத்து' என்ற பெயரில் தொகுக்கப்பட்டுள்ளது (விலை-ரூ40). அதில் முதல் கதையாக இந்த 'வெயிலோடு போயி' அமைந்துள்ளது. அதை நான் படித்தபோது உண்டான உணர்வு, எவ்வளவு தூரம் திரையில் சாத்தியமாகும் என்ற கவலை இருந்தது. ஆனால் 'பூ' திரைப்படத்தைப் பார்த்தபோது கதை, கவிதையாக மாறி அதில் மாரியாயி(பார்வதி) உயிரூட்டப்பட்ட பிம்பமாக அலைந்து கொண்டிருந்தாள்.

நண்பர்களே முடிந்தால் நீங்கள் சிறுகதையைப் படித்துவிட்டு திரைப்படத்தைப் பாருங்கள். அந்த சிறுகதை உங்களுக்குள் உருவாக்கும் பிம்பம் மிகவும் அற்புதமான தோற்றம் கொண்டது.



ஒரு திரைப்படத்தை அணுகும் முறை அல்லது படம் பார்க்கும் போது கவனிக்க வேண்டியவை:

1) முதலில் திரைப்படத்தை அப்படியே ஏற்றுக்கொள்ளப் பாருங்கள்.
2)திரைக்கதையில் ஏதேனும் குளறுபடி இருந்தால் மட்டும் விவாதம் செய்யுங்கள். மற்றபடி உங்கள் கருத்துக்கு திரைப்படத்தை வளைக்கப் பார்க்காதீர்கள்.
3)படம் 'slow'வாக இருக்கிறது என்ற மோசமான மனநிலையைத் தூக்கி எறியுங்கள்.
4)'திரைப்படத்தின் வேகத்தை திரைக்கதைதான் நிர்ணயம் செய்யும்; நிர்ணயம் செய்ய வேண்டும்' என்பதை தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள்.
5)திரைப்படத்தின் எல்லைகளை தீர்மானிப்பது கதையும், திரைக்கதையும் தான்.
6)இந்த செய்திகள் தரமான சினிமாவிற்க்கு மட்டுமே பொருந்தும். தரமான சினிமா எதுவென்று கேட்கிறீர்களா?
சமீபத்தில் 'பூ'.

மேற்கொண்டு 'பூ' திரைப்படத்தைப் பற்றி நிறைய பேச விரும்பவில்லை. அந்த அற்புதத்தை நீங்கள் நேரடியாக சென்று உணருங்கள். அதுதான் ஒரு நல்ல திரைப்படத்திட்க்கு நாம் கொடுக்கும் மரியாதை.

'தெனாவட்டு' போன்ற மட்டரகமான படங்களையெல்லாம் சன் டி.வி, சூரியன் fm, குங்குமம் மற்றும் தினகரன் போன்ற ஊடகங்கள் மிகையான விளம்பரங்களைக் கொடுத்து நமக்கு அயர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

ஆனால், நல்ல திரைப்படங்களைப் பற்றி யாரவது நான்கு பேர் தான் பேசுகிறார்கள். நானும் பேசுகிறேன். நீங்களும் பேசுங்கள். அப்போது தான் தரமான சினிமாவிற்க்கு தரமான ரசிகர்கள் கிடைப்பார்கள். 'பூ' திரைப்படத்தைப் பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை கூறுங்கள். ஆரோக்கியமான விவாதங்களைத் தொடரலாம்.

Monday, November 24, 2008

நடிகர் விஜய் அவர்களே தயவுசெய்து அரசியலுக்கு வராதீர்கள்!

நடிகர் விஜய் அவர்களுக்கு,
எந்த ஒரு நாட்டில் கலையும், அரசியலும் சிறந்து விளங்குகிறதோ அந்த நாட்டில் உள்ள மக்கள் அறிவிலும், செல்வதிலும் சிறந்தவர்களாக இருப்பார்கள். ஆனால், நமது தமிழ்நாட்டில் 'திரைப்படம்' எனும் 20ம் நூற்றாண்டின் ஒரு ஆகச்சிறந்த கலையை மிகமோசமாக பயன்படுத்தியவர்களில் நீங்களும் ஒருவர் என்பது மறுப்பதற்கில்லை.

வாழ்க்கையை பதிவுசெய்யும் கலையை பொழுதுபோக்குக் களமாக, நடனம் எனும் நளினத்தை குரங்காட்டமாக மாற்றிய பெருமை உங்களையே சேரும்.

ஒரு மனிதன் எந்தத் துறையைச் சார்ந்திருக்கிறானோ அந்தத் துறையை தன்னால் இயன்றவரை சில கட்டங்களாவது உயர்த்துவானேயானால், அவன் மதிப்பிற்குரியவன் ஆவான். பாலுமகேந்த்ரா, மகேந்திரன், மணிரத்னம், பாலா போன்ற சில இயக்குனர்கள் தமிழ் சினிமாவின் உயரத்தை அதிகரிக்க முயலும் போதெல்லாம் குரங்காட்டம் மூலம் நிங்கள் அதனை தெருவுக்கு இழுத்து வந்து விடுகிறீர்கள். இந்த உண்மையை எந்த ஒரு தரமான சினிமா விரும்பியும் மறுக்கமாட்டான்.

அடுத்ததாக அரசியல். அரிசி கொடுத்தவன், அயன் பாக்ஸ் கொடுத்தவன், காலை ஏழு மணிக்கே மட்டன் பிரியாணி சாப்பிட்டு விட்டு 8லிருந்து 4மணிவரை உண்ணாவிரதம் இருந்தவனெல்லாம் அரசியல் நடத்தினா நாடு எப்படி இருக்கும்.

சினிமாவைக் கெடுத்து போதாதென்று அரசியல் வேறு. விஜய் அவர்களே உங்கள் தந்தையைப் போன்று குடும்ப உறவுகளை!? சித்தரிக்கும் (கற்பழிப்பு காட்சிகள் நிறைந்த) படங்களை எடுக்கும் சிந்தனைவாதிகள் உங்கள் பின்னே இருப்பது தான் எங்களுக்கு மிகவும் பயமாக இருக்கிறது.

உங்களுக்காக ரசிகர்கள் 37ஊர்களில் உண்ணாவிரதமிருந்தார்கள். சராசரியாக 50 பேர் என்று கணக்கிட்டால் மொத்தம் 37 X 50 = 1850 பேர். டெப்பாசிட் பணம் கூட கிடைக்காது சார்.

நான் கூறுவது இல்லாமல், உங்கள் கணக்கு சரியாகுமானால் எங்கள் தலைவிதியை யாராலும் மாற்ற முடியாது. ஏற்கனவே அரசியல் கெட்டுவிட்டது. நீங்களும் கெடுக்க வேண்டாம். உங்களுக்கு உரிமை இருக்கிறது தான். மறுப்பதற்கில்லை. நேர்மையானவர்கள் வரட்டும்.

நிஜத்தில் நடித்தது போதும்; இனியாவது சினிமாவில் நடிக்க முயற்சி செய்யுங்கள். நான் வேண்டுமானால் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி படங்களில் பயன்படுத்திய 'ஒரே பாடலில் பணக்காரனாகும்' பாடல் கேசட்டை வாங்கித்தருகிறேன். வைத்துக்கொண்டு பெரிய ஆள் ஆகிவிடுங்கள்.

"சேரி இல்லா ஊருக்குள்ள
பொறக்க வேண்டும் பேரப்புள்ள" என்று உங்கள் படங்களுக்கு தொடர்ந்து ஜால்ரா பாடல்களை எழுதி வரும் பா. விஜய்யைப் போலவே நானும் ஆசைப்படுகிறேன். அதனால் தான் சொல்கிறேன்.நீங்கள் அரசியலுக்கு வராதீர்கள்!

Saturday, November 15, 2008

அந்த அயோக்கியனை தேடிக் கொண்டிருக்கிறேன்!


இந்த உலகத்தில்
யாரைவிடவும்
என்னை அதிகமாய் வெறுப்பவன்
ஒருவன் இருக்கிறான். அவன்,
நான் சிரிக்கும் பொழுது
என்னை உறுத்தும்படியாகப் பார்க்கிறான்
நிலைகுலைந்து கண்கள் கலங்கும் தருணங்களில்
பரிகாசம் செய்கிறான்.

வெயில் எரிக்கும் சமயங்களில்
மூச்சுக் காற்றால்
மேலுமென்னை சுட்டெரிக்கவும்,
இரவுகளில் தனிமைப்படுத்தவும்
அவன் தயங்குவதேயில்லை.

முற்றங்களில் தொலைத்துவிட்டுப் போகவும்
நான் வாழ்நாள் முழுக்க நோகவும்
அவன் தன்னை உரமேற்றிக் கொண்டிருக்கிறான்.

என்னைப் பலகீனப்படுத்தும்
அவனிடம் ஒரே ஒரு உதவிகேட்டேன்.
"நான் மீள முடியாதபடி
தயக்கம் என்னை
இரு கரங்களாலும் பற்றிக் கொண்டுள்ளது.
என்னைத் தயக்கங்களிலிருந்தும், தனிமையிலிருந்தும்
விடுவிக்கும் ஒருத்தி இருக்கிறாள்.
அவளிடம் என் காதலைச் சொல்ல
உதவி செய்" என்றேன்.
மறுத்தான் அவன்.

அவன் கால்களில் விழுந்து அழுதேன்.
எந்த அசைவுமின்றி நின்றுகொண்டிருந்தான்.

அந்த அயோக்கியன் எனக்குள் இருக்கிறான்,
நான் அவனைத் தேடிக் கொண்டிருக்கிறேன்!

Tuesday, November 11, 2008

வாழ்க்கை கருணையற்றது!


டென்சிங். இரண்டாம் உலகப் போரில் விமானத்தில் பறந்தபடி குண்டு மழை பொழிந்த அமெரிக்க வீரரென நினைத்து விடாதிர்கள். காரைக்குடியில் எனது சிறு வயது தோழன்.இப்போது மினி லாரி ஓட்டுனராக உள்ளான்.

நீலகிரி மாவட்டம் உயிலட்டி கிராமத்திற்க்கு, காரைக்குடியிலிருந்து தேக்கு கட்டைகளை எடுத்துக்கொண்டு ஒரு இரவில் இருவரும் பயணமானோம். அன்றைய இரவு பேசிக் கழித்த படியே இருளில் கரைந்தது. எதிரே வரும் வாகனங்களின் விளக்கொளிகள், கண்களில் வலிஏறச் செய்திருந்தன. தூக்கம் கண்களை அழுத்த தேநீர் அருந்தி விட்டு மீண்டும் உதகை நோக்கி பயணித்தோம். காற்றைக் கிழித்தபடி லாரி விரைந்து கொண்டிருந்தது.

லாரி ஓட்ட ஆரம்பித்த புதிதில் தடுமாறிய டென்சிங், இப்போது ஒரு இரும்புக் குதிரையை போல் லகுவாக செலுத்தினான்.அவனுக்கு முதல் மலை பயணம் என்பதால் இயற்கையை ரசிக்க விடாத படி பயம் குளிரைப்போல இருவரின் உடலுக்குள்ளும் கசிந்து கொண்டிருந்தது.

உயிலட்டி நாங்கள் நினைத்ததை விடவும் மிகவும் அழகாக இருந்தது. தேக்கு கட்டைகளை இறக்கி வைத்த பின்பு படுகர் இனத்தை சேர்ந்த திப்பையன் என்பவரது முன்னூறு ஆண்டுகள் பழைமையான வீட்டிற்க்கு சென்ற போது, வீடு முழுக்க மயக்கும் வஸ்துவின் வாசனை எழுந்தது. திப்பயனிடம் கேட்டபோது ஜாடி நிறைய கஞ்சா இலைகளை எடுத்து காண்பித்தார்.அன்று முழுக்க திப்பயன்,"சரக்கு வாங்கித்தா, சிகரெட் வாங்கித்தா" என்று எரிச்சலூட்டினான். பொறுமையிழந்த டென்சிங், திப்பயனை அருகில் அழைத்து வந்து திட்டி விட்டான். திப்பையனுக்கு போதை இறங்கிப்போனது.

அன்று மாலை, மலையிலிருந்து கிழே இறங்கிக்கொண்டிருந்தோம். குளுமையான காற்று நாசியில் ஏறி அற்புதமான சுகந்தத்தை தந்து கொண்டிருந்தது. நான்கு நாட்கள் இரவு பகலாக வண்டி ஒட்டிய காரணத்தால் தூக்கத்தை கட்டுப்படுத்திய படி லாரியை ஓட்டிக்கொண்டிருந்தான். மறுநாள் காலை காரைக்குடிக்கு செல்ல வேண்டும் என்பதால் தூக்கத்தை மறந்திருந்தான்.இரவு ஒட்டன்சத்திரத்தில் உள்ள காய் கரி அங்காடியில் காரைக்குடிக்கு எடுத்துச்செல்ல சரக்கு ஏதேனும் உள்ளதா என கேட்ட பொழுது ஏற்கனவே சரக்குகள் எடுத்து செல்லப்பட்டிருந்தன.ஏமாற்றத்துடன் காரைக்குடி நோக்கி விரைந்து கொண்டிருந்தது லாரி.


உறவுகள்,உணவு,உறக்கம்,சிரிப்பு என எல்லாவற்றையும் தொலைத்துவிட்டு அவன் நாயாய் அலையும் வாழ்க்கைக்கு பழக்கப்பட்டது யாரால்? டென்சிங் வசிக்கும் தெருவில் அவனது பெற்றோரைத் தவிர அனேகபேர் ஆசிரியர்கள். டென்சிங் மாநில அளவிலான ஹாக்கி விளையாட்டு வீரன். இளங்கலை பொருளாதாரத்தில் பல்கலைகழக அளவில் இரண்டாவது மதிப்பெண் பெற்றவன். அவனுடைய கனவுகள் யாவும் தன் ஒரு வழக்கறிஞர் ஆவதே.

அவனது பெற்றோர்கள் அவனை M.B.A., படிக்க வைக்க வேண்டும் என ஆசைப்பட்டனர். அவர்கள் என்ன செயவார்கள்?சுற்றி உள்ளவர்கள் M.B.A., பொறியாளர் என்று பெருமை பேசும் பொழுது, படிப்பறிவு இல்லாத அவனது பெற்றோர்களுக்கு அப்போது தெரியவில்லை. சிபாரிசு இல்லாத நடுத்தர குடும்பங்களுக்கு வேலை கிடைப்பது குதிரைக் கொம்பென்று.

ஒரே ஒரு பையனை வெளியூர் அனுப்பி படிக்க வைக்க விரும்பாத அவனது பெற்றோர்கள் டென்சிங்கின் கல்லூரி சான்றிதழை மறைத்து வைக்க பிரச்சனை பூதாகரமானது.பக்கத்துக்கு வீட்டு ஆசிரியர்கள் நள்ளிரவு பஞ்சாயத்து நடத்தினார்கள். குடித்திருந்த அவனது அப்பா அவனின் தோளை பிடிக்க முயன்று தடுமாறி கீழே உள்ள கல்லில் விழுந்தார்.பின் மண்டையில் அடி பட்ட அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல, துணிகளை அள்ளிக்கொண்டு அவனது அம்மாவும் வீட்டை விட்டு வெளியேறஇப்போது அந்த வீட்டிலிருப்பது வெறுமை மட்டும் தான். இந்த அனைத்து பிரச்சனைகளும் நடந்தேறியது, டென்சிங்கின் சட்டக்கல்லூரி நேர்முகத் தேர்வுக்கு முந்தய நாள் இரவு.

எப்போது டென்சிங் வீட்டிற்க்கு சென்றலும் விருந்து பரிமாறும் அவனது அம்மாவையும், "நான் எந்த பொண்ணு பின்னாடி சுத்தி, ஊர் சண்டை போட்டுட்டு இருந்தேன்.படிக்கனும்னு தானே ஆசைப்பட்டேன்" என்று புலம்பும் டென்சிங்கையும் நினைக்கையில் மனது தன்னை அறியாமல் மவுனம் கொள்கிறது.

இரண்டு வாரங்களுக்கு முன்னால் சரக்கு ஏற்றிக்கொண்டு சென்னை வந்த டென்சிங் என்னுடைய அறைக்கு வந்திருந்தான். வீட்டருகே புதிதாக திறந்திருந்த உணவகதிட்க்கு அவனை அழைத்துச்சென்றிருந்தேன். ஆரம்ப நாட்களில் சுவையாக உணவு பரிமாறப்பட்ட அந்த உணவகத்தில் அன்று எதுவுமே நன்றாக இல்லை.(அன்றிலிருந்து ஒருநாள் கூட அங்கு பழைய சுவையில் உணவு பரிமாரப்படவே இல்லை என்பது வேறு கதை) காசு, பணம் தான் எல்லோரையும் ஆடவைத்துக் கொண்டிருக்கிறது என்பதை நினைக்க நினைக்க ஆத்திரமாக வந்தது. அரை குறையாக சாப்பிட்டும்,சாப்பிடாமலும் அவன் காரைக்குடிக்கு திரும்பிய போது, அவனை சூழ்ந்த நெருக்கடிகள் ஒரு இரவைப்போல பிசுபிசுப்புடன் என்னில் இறங்கி அழுத்தத் துவங்கியது.

இரவு சென்னையிலிருந்து கிளம்பியவன் அதிகாலை புதுக்கோட்டை-காரைக்குடி நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது அவனது லாரியில் சிக்கி ஒரு பெரியவர் இறந்து போனார். அன்றிலிருந்து ஒரு வாரம் அவன் லாரியை எடுக்காமல் மதுவில் கரைந்து கொண்டிருந்தான்.

"வாழ்க்கை கருணையற்றது.அது யாவரின் வாழ்க்கையையும் ஒரு வெற்றிலையை மென்று துப்புவதைப் போல உதட்டில் ரத்தச் சாறு வழிய கடந்து போய் விடுக்கிறது" என்று எஸ்.ராமகிருஷ்ணன் நெடுக்குருதி நாவலின் முன்னுரையில் எழுதியிருப்பார். அது உண்மை தானோ என்னவோ?

"காசுக்கும், பணத்துக்கும், ஊரார் பெருமைக்கும் ஆடக் கற்றுக்கொண்டோம். இது எத்தனை பெரிய அவமானம். வாழ்க்கை ஒரு கவிதை புத்தகத்தைப் போலவோ, நாவலைப் போலவோ இயல்புகளின் பதிவாக இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் அக்கௌன்ட் நோட்டைப் போல வாழ்க்கை வெறும் வரவு,செலவுகளின் பதிவாக இருப்பின், கணக்குகள் சரி பார்க்கப்பட்டு பின்பு நீங்களோ,நானோ தூர தூக்கி எறியப்படுவோம் என்பதை நினைவில் கொள்ளவோம்.

பின்குறிப்பு:
அக்டோபர் மாதம் சென்னையில் நடந்த நேர்முகத் தேர்வில் கலந்து கொண்ட டென்சிங், ஸ்போர்ட்ஸ் கோட்டா மூலமாக கோவை சட்டக் கல்லூரியில் சேர்ந்து விட்டான்.

புதிய தகவல்:

கை செலவுக்காக சென்ற வாரம் டைல்ஸ் கல் ஏற்றிக்கொண்டு கோட்டயம் சென்ற டென்சிங்,

1)ஒற்றை விளக்குடன் வாகனம் ஒட்டியது.
2)முறையான லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஒட்டியது.
3)சீருடை அணியாமல் இருந்தது.
4)ஓவர் ஸ்பீட்.
5)ஓவர் லோடு,
என்று ஐந்து 'கேஸ்' வங்கி வந்திருக்கிறான். கூடிய சீக்கிரமே வக்கீல் ஆகிவிடுவான் போல. என்ன நான் சொல்வது சரிதானே?

Sunday, November 9, 2008

சூப்பர் ஸ்டாரும்,'என்னத்த' கண்ணையாவும்!


நான்கு நாட்களுக்கு முன்னதாக எந்த சேனலை பார்ப்பது என்ற குழப்பத்துடன் ரிமோட்டை வைத்து சேனலை மாற்றிக் கொண்டிருந்தேன்.அப்போது சன் தொலைக்காட்சியில், ரஜினி தன் ரசிகர்களுடன் கலந்துரையாடிய நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது.


ரிமோட்டை கீழே வைத்துவிட்டு, ரஜினியின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென ரஜினியின் முகமானது, நடிகர் 'என்னத்த' கண்ணையாவை நியாபகப்படுத்தியது. எந்திரனில் நடித்துக்கொண்டிருக்கும் ரஜினியும், தொட்டால் பூ மலரும் திரைப்படத்தில் வரும் 'என்னத்த' கண்ணையாவும் மிக நெருக்கமான உருவ அமைப்புடன் இருந்தார்கள்.

'ரஜினி' என்ற நடிகனை வியாபாரிகள் (தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள்) பன்ச் வசனம் பேசவைத்து வசூல் மன்னனாக மாற்றிவிட்டார்கள். ஆனால் 'என்னத்த' கண்ணையா பேசிய வசனங்கள்...

"என்னத்த...போயீ.., என்னத்த...செய்ய..?" (மன்னன்)
"வரும்... ஆனா வராது..!"
"சும்மா எம்.ஜி.ஆர் மாதிரி தகதகன்னு...மின்னுரிங்க..."(தொட்டால் பூ மலரும்) இப்படியே இழுத்து இழுத்து வசனம் பேசி, வெறும் கண்ணையா 'என்னத்த' கண்ணையாவாக மாறிவிட்டார்.
என் நண்பன் மகேஷ் அடிக்கடி சொல்வது மாதிரி எல்லாத்துக்கும் கட்டம்(ஜாதகம்) நல்லா இருக்கணும் போல! நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருக்கும் போதே கரண்ட் கட் ஆகிவிட்டது. ஒரு நிகழ்ச்சியைப் பார்க்கக் கூட கட்டம் நல்லா இருக்கானும் போல.., என்னுடைய கட்டத்தைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன்; இருளில் மூழ்கியபடி...

Monday, November 3, 2008

புலிகளின் தீபாவளி!

அக்டோபர் 28ம் தேதி காலையில் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள குமாரபுரம் பகுதியில் உள்ள பள்ளிக்கூடம் ஒற்றை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியது இலங்கை ராணுவம். ஆனால் அவர்களின் குறி தப்பி... போரினால் இடம் பெயர்ந்து கொண்டிருந்த மக்களைத் தாக்கியது. இதில் மூன்று பேர் இறந்தனர். இதனால் கடும் கோபம் கொண்ட பிரபாகரன் இலங்கை ராணுவம் மீது விமானத் தாக்குதல் நடத்த உத்தரவிட்டார்.

28ம் தேதி இரவு புலிகளின் விமானத்தளத்திலிருந்து புறப்பட்ட விமானம், மன்னார் மாவட்டத்திலுள்ள தள்ளாடி என்ற இடத்தில் இருக்கும் சிங்கள ராணுவ தரைப்படைத் தளத்தை இலக்கு வைத்து சீறிப்பாய்ந்தது. சரியாக 10.20 மணிக்கு இலக்கை அடைந்த புலிகளின் விமானம் தரைப்படைத் தளத்திற்க்கு நேர் உச்சியிலிருந்து மூன்று குண்டுகளை அடுத்தடுத்து பிரசவிக்க தரைப்படைத்தளம் வெடித்து சிதறியது.

"இந்த தளத்தில் இயங்கிவந்த ரேடார் முற்றிலுமாக லாக் ஆகி விட்டதால் புலிகளின் விமானத் தாக்குதலை தடுக்க முடியவில்லை. சீனாவிலும், இஸ்ரோவிலிருந்தும் தருவித்த அதி நவீன 20 பீரங்கிகள் அழிக்கப்பட்டுள்ளது" என்கின்றனர் ராணுவத்தினரே.

இலங்கை ராணுவம் சுதாரிப்பதட்க்குள் இலங்கையின் வட பகுதியில் தாக்குதலை நடத்திவிட்டு அப்படியே கிழக்கு பகுதியில் உள்ள கொழும்பு நகரை நோக்கி அதிவேகத்தில் சீறிப்பாய்ந்துள்ளனர் வான் படையினர்.

கொழும்பு
நகரின் மையப் பகுதியிலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கெலனி ஆற்றின் கரையோரம் அமைந்திருக்கும் கேலனிதிச அனல் மின் நிலையத்தை சரியாக இரவு 11.45க்கு இரண்டு குண்டுகளை விடுவித்து ட்ராம்ஸ்பார்ம்களையும் அழித்தனர்.
தாக்குதல் நடந்த சமயத்தில் மின் ஊழியர்கள் யாரும் இல்லாததால் உயிர்பலி நிகழவில்லை.

163 மெகாவாட் மின்
சாரத்தை உற்பத்தி செய்யும் வகையில், சுமார் 800 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மின் நிலையம் தான் கொழும்பு நகரத்தின் மின் தேவையில் முக்கிய பங்கு வகிக்கிறது. "அதி முக்கியமான இந்த மின் நிலையத்தை குறிவைத்து புலிகள் தாக்கியதை அறிந்து ராணுவத்தினரே நிலை குலைந்து விட்டனர்" என்கிறார்கள் மிரட்சியுடன் கேலனிதிச மின் ஊழியர்கள்.

பின்குறிப்பு:
1) கொழும்பு நகரத்திற்
க்கு மற்றொரு பகுதியிலிருந்து மின்சாரம் வழங்க 4 மணி நேரம் போராடியிருக்கிறார்கள்.

2) இது விடுதலைப் புலிகளின் 8வது ஏர்அட்டாக்.

3) ஒரே சமயத்தி இரண்டு தாக்குதலை புலிகள் நடத்தியதும் இது தான் முதல்முறை.


4) வடக்கில் அட்டாக் நடத்தியதுமே, ராணுவத்தின் அத்தனைப் படைகளும் உஷார் நிலைக்கு வந்துவிட்டன. அப்படியிருந்தும் இலக்கை தாக்குவதட்க்காக ஒன்னே கால் மணி நேரம் வான்பரப்பில் பறந்து கொண்டிருந்த புலிகளின் விமானத்தை கண்டுபிடிக்க முடியாமல் திணறியுள்ளது ராணுவம்.

5) இரு மாதங்களுக்கு முன்னால் வவுனியா ராணுவ முகாம் மீது புலிகள் ஏர் அட்டாக் நடத்திய போது இலங்கை ராணுவம் வெளியிட்ட செய்தி:
"புலிகளின் விமானத்தை சுட்டு வீழ்த்திவிட்டோம். அவர்களிடம் விமானப்படை இனி இல்லை
நன்றி:நக்கீரன்